திருச்சி, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்லுக்கார தெருவில் நேற்று(ஜூன் 30) இரவு சில இளைஞர்கள் கஞ்சா பயன்படுத்தி கொண்டு இருந்துள்ளனர். அதனை அப்பகுதியை சேர்ந்த டிரைவர் பாலாஜி என்பவர் தட்டிக் கேட்டார். எங்களை தட்டி கேட்பதற்கு நீ யார்? என்று கேட்ட அந்த கஞ்சா கும்பல், பாலாஜியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர் அங்கிருந்து தப்பித்து ஓடவே அவரை துரத்திய அந்த கும்பல் வழிமறித்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் கீழே சரிந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

Comments are closed.