பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் முன்னிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி.தினகரன் இணைந்தார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் அவரச கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சி தலைமையக்ததில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் டிடிவி. தினகரன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறோம். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கும் நோக்கில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறோம். பழைய விஷயங்களை நினைத்துக்கொண்டு கட்சி மற்றும் தமிழ்நாட்டு நலனை பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான். விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற வள்ளுவரின் வாக்குப்படி கூட்டணியை முடிவு செய்துள்ளோம். மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம். தமிழகத்தில் நல்லாட்சி அமைய உறுதுணையாக இருப்போம்” என்றார். பின்னர் அவர், பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயலை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.