Rock Fort Times
Online News

நான் துரோகியா? அன்புமணிக்கு, ஜி.கே.மணி பதில்!

பா.ம.க. செயல் தலைவர் ஜி.கே. மணி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- என்னை துரோகி என்று அன்புமணி கூறியது வேதனையாக உள்ளது. நான் அன்புமணிக்கு எந்த வகையிலும் கெடுதலோ, துரோகமோ செய்யவில்லை. அன்புமணியின் செயல்பாடுகளால் தான் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார். ராமதாஸ், எனது குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் அரசு பணிக்கு போகமாட்டோம் என்று கூறினார். இந்த நேரத்தில் அன்புமணி, என்னிடம் வந்து மத்திய மந்திரி பதவி கேட்கக் கூறினார். நான் ராமதாசிடம் பேசி, நீங்கள் பதவிக்கு வரமாட்டேன் என்கிறீர்கள். உங்கள் மகனையாவது மத்திரியாக்கலாம் என்றேன். அவர் கடுமையாக என்னிடம் கோபப்பட்டார். நான் செய்த சத்தியம் என்னவாகும் என்றார். அதன்பிறகு, காடுவெட்டி குருவை அழைத்து சென்று மீண்டும் ராமதாசிடம் பேசினோம். அவரும் வற்புறுத்தினார். அதன்பிறகு, அன்புமணியை மந்திரியாக்க ராமதாஸ் ஒப்புக்கொண்டார். பா.ம.க. கூட்டணி குறித்து எந்த தலைவர்களுடனும் நான்தான் பேசுவேன். ஒருமுறை என்னிடம் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு நீங்கள்தான் போகவேண்டும் என்று ராமதாஸ் கூறினார். நான் அன்புமணியை பரிந்துரைத்தேன். அவரைத்தான் மாநிலங்களவை உறுப்பினராக்கினோம். ராமதாஸ் பலமுறை சிறைக்கு போனார். அன்புமணி எத்தனை முறை சிறைக்கு போனார். பாமக தனித்து போட்டியிட்டபோது, அன்புமணிதான் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இப்படி, அவருக்கு எந்த கெடுதலும் செய்யாத என்னைப்பார்த்து துரோகி, அப்பாவையும், என்னையும் பிரித்துவிட்டார் என்கிறார். அது எப்படி, அப்பாவையும், மகனையும் பிரிக்க முடியுமா? அன்புமணியை பார்க்காதீர்கள் என்று ராமதாசிடம் சொன்னால் அவர் கேட்பாரா? தந்தையை பார்க்காதீர்கள் என்று அன்புமணியிடம் சொன்னால் அவர்தான் கேட்பாரா? . இருவரும் உட்கார்ந்து பேசினால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். பிரிந்து கிடந்தால் தேர்தலை எப்படி சந்திக்க முடியும். வீட்டுக்குள் பேச வேண்டிய விஷயத்தை பொதுவெளியில் பேசியதால் தான் பிரச்சினை வெடித்தது. ராமதாஸ் உடன் நான் இருப்பதால்தான் அன்புமணி என்னை வசைபாடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்