தஞ்சையில் பட்டப் பகலில் பயங்கரம்: பள்ளிக்கு சென்ற ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை… தன்னை காதலித்து விட்டு வேறு ஒருவருடன் ‘நிச்சயதார்த்தம்’ நடந்ததால் வாலிபர் வெறிச்செயல்!
தஞ்சாவூர், மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் காவியா( வயது 26). இவர், ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த அவரது சமூகத்தை சேர்ந்த கருணாநிதி மகன் அஜித்குமார் (29) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவியாவிற்கு, பெற்றோர் வற்புறுத்தலின்படி அவரது உறவினருக்கு திருமணம் செய்து வைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இந்த விபரத்தை காவியா அஜித்குமாருக்கு தெரிவிக்காமல் அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதேபோல் நேற்று இரவு 8 மணிக்கு இருவரும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது தனக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தகவலையும், அதற்கான போட்டோக்களையும் அஜித்குமாருக்கு காவியா காட்டியுள்ளார். இதனைப் பார்த்த அஜித்குமார், தன்னை காதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்வதா? என காவியா மீது ஆத்திரம் அடைந்தார். இந்தநிலையில் இன்று(27-11-2025) காலை காவியா பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவரை வழிமறித்த அஜித்குமார் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவியாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில்
ரத்த வெள்ளத்தில் சரிந்த காவியா அதே இடத்தில் உயிரிழந்தார். இந்தக் கொலை குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காவியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பியோடிய குற்றவாளி அஜித்குமாரை போலீசார் வலைவீசி தேடிவந்தநிலையில், தஞ்சை, தாலுகா போலீஸ் நிலையத்தில் அவர் சரணடைந்தார். பட்டப்பகலில் ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.