தமிழக சட்டசபை கூட்டம் நாளை( அக்.14) செவ்வாய்கிழமை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிப்பதற்காக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நிறைவடைந்ததும் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. முதல்நாளில் கரூரில் நடைபெற்ற துயர சம்பத்தில் உயிரிழந்தவர்கள் மறைவுக்கும், மறைந்த நாகாலாந்து முன்னாள் கவர்னர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது. தொடர்ந்து, வால்பாறை உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அத்துடன் நாளைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து, 16, 17, 18 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும். அப்போது, 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் பேரவையில் அளிக்கப்படும். ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். கேள்வி நேரம் முடிந்ததும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். கடைசி நாளில் 2025- 2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.