தமிழ்நாடு முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதனை தற்காலிகமாக நிறுத்தி இன்று(16-09-2025) அதிகாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். டெல்லி சென்றடைந்த அவரை அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வு எடுக்கும் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அமித்ஷாவை சந்திக்கும் முன், குடியரசுத் துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். இதனையடுத்து, அவர் ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்திலும் கலந்து கொள்கிறார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், பாஜக – அதிமுக இடையேயான உறவு நிலை, கூட்டணிக் கணக்குகள், இட ஒதுக்கீடு போன்ற அம்சங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் சந்தித்த நிலையில் தற்போது இபிஎஸ் சந்திக்க உள்ளதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments are closed.