மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்து வந்த மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்தது. இருவரும் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டி இருந்தார். தன்னை துரோகி என்று கூறிய வைகோவுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் கடந்த 2-ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, கருப்பு சட்டை அணிந்தும், யார் துரோகி? என்று எழுதிய அடையாள அட்டையுடன் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மேலும் ம.தி.மு.க. உடமைகள், ஏடுகள் அனைத்தையும் ஒப்படைக்கக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கையை கைவிடக்கோரி 15 நாட்களுக்குள் மல்லை சத்யா எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிக்கலாம் என்று வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மல்லை சத்யா கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு எதிராக மல்லை சத்யா செயல்பட்டது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்திருக்கிறது என்பதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருக்கிறேன். அதன்படி மல்லை சத்யா மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.