15 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத சாலையை மேம்படுத்த மத்திய அரசு அனுமதி…* அருண்நேரு எம்.பி.க்கு குவியும் பாராட்டு…!
திருச்சி நெடுஞ்சாலைத் துறை கோட்டத்திற்கு உட்பட்ட எதுமலையிலிருந்து பெரகம்பி செல்லும் சாலையின் நடுவில் சுமார் 2.100 கி.மீ இடைப்பட்ட தூரம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இச்சாலை எவ்வித பராமரிப்புமின்றி இருந்து வருகிறது. நீண்ட காலமாக சாலை அமைக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பினர். பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு எம்.பி.யிடமும் மனு அளித்து முறையிட்டனர். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து 15 ஆண்டுகாலமாக மேம்பாடு செய்யாத இச்சாலையினை சரிசெய்யும் நோக்கில் சுமார் 3.15 ஹெக்டர் இழப்பீடு நிலத்தினை ஆர்ஜிதம் செய்து வனத்துறைக்கு கொடுத்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு மூலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வனத்துறைக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது மாவட்ட வருவாய் துறையின் மூலம் மாற்று இடம் வனத்துறை நிலத்திற்கு அருகிலேயே கொடுப்பதால் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலையினை மேம்பாடு செய்ய மத்திய அரசு வனத்துறையிடமிருந்து 30.07.2025 அன்று அனுமதி அளித்துள்ளது. இச்சாலையினை மேம்பாடு செய்ய அரசிற்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் விரைவில் சாலை மேம்பாடு செய்யப்படும் என தெரிகிறது. இந்த சாலை வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, மத்திய அரசு ஆகியவற்றுடன் மாநில அரசு அனுமதியும் பெற்றுக் கொடுத்த பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Comments are closed.