பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும்… * திருச்சி கருத்தரங்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு…
தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னை உயர்நீதிமன்றம், திருச்சி மாவட்ட நீதித்துறை சார்பில் பாலின உணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் வரவேற்றுப் பேசினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.என். மஞ்சுளா, திருச்சி மாவட்டத்தின் போர்ட்பொலிரோ நீதிபதி வடமலை, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மாநகர காவல் ஆணையர் காமினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கருத்தரங்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் அனிதா சுமந்த் சட்டம் குறித்த கையேட்டை வெளியிட, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் பெற்றுக் கொண்டார். பின்னர், நீதிபதி டாக்டர் அனிதா சுமந்த் பேசும்போது, பணியிடங்களில் பல்வேறு வகைகளில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. இதனை சில பெண்கள் வேலை பறிபோய் விடுமோ என்ற பயத்தில் கண்டு கொள்ளாமல் போய்விடுகிறார்கள். ஒரு சில பெண்கள் தைரியமாக புகார் தெரிவிக்கிறார்கள். இதுபோன்ற புகார்களை விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும். இதனை மாவட்ட முதன்மை நீதிபதி மேற்பார்வையிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் திருச்சி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஏ.பி. நசீர்அலி நன்றி கூறினார். கருத்தரங்கில் நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் திருச்சி வழக்கறிஞர் சங்கத் தலைவர் எஸ்.வி. கணேசன், செயலாளர் சி,முத்துமாரி, குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் டி.வி.வெங்கட், வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் வடிவேல்சாமி, இணைச் செயலாளர் விக்னேஷ், துணை தலைவர் சசிகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், புவனேஸ்வரி மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.