Rock Fort Times
Online News

கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்…!

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத் துறையில் பணிபுரியும் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கும் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாநில அளவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்து இன்று(25-06-2025) போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் திருச்சியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருவாய் துறை ஊழியர்கள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து வெஸ்டிரி ரவுண்டானா சரவணன் சதுக்கத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து சங்கத்தின் நிர்வாகி பொன்.மாடசாமி கூறுகையில், மழை, வெயில் பாராது பணிபுரியக்கூடிய வருவாய்த்துறை ஊழியர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் பணி பாதுகாப்பு இல்லை. எனவே தமிழக அரசு உடனடியாக பணி பாதுகாப்பு சட்டத்தினை இயற்ற வேண்டும். வருவாய் துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். கடந்த காலங்களில் தமிழக அரசுத் துறைகளில் 25% பணியிடங்கள் கருணை அடிப்படை நியமனத்திற்கான ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நியமனம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி கருணை அடிப்படை நியமனத்திற்கான உச்சவரம்பு 25 சதவீதத்திலிருந்து 5 % குறைத்து மறுநிர்ணயம் செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் கருணை அடிப்படையிலான பணிநியமனம் என்பதே முற்றிலும் தடைபடும் நிலை
உள்ளது. எனவே மீண்டும் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். எங்கள் போராட்டத்தினை கருத்தில் கொண்டு எங்களுடைய மாநில ஒருங்கிணைப்பாளர்களை உடனடியாக அழைத்து பேசி இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும், இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்