Rock Fort Times
Online News

பண்ருட்டி அருகே மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: ஒருவரை சுட்டுப்பிடித்த போலீசார்…!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவர் நேற்று( ஜூன் 16) மதியம் 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே பகுதியியில் உள்ள சவுக்கு தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென அந்த மூதாட்டியை தாக்கியது. பின்னர் அவர்கள் மூதாட்டியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். தொடர்ந்து மூதாட்டி அணிந்திருந்த ¾ பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது. இதற்கிடையே அந்த வழியாக சென்ற பொதுமக்கள், படுகாயத்துடன் கிடந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மூதாட்டி சவுக்கு தோப்புக்கு செல்வதை நோட்டமிட்ட 35 வயது மதிக்கத்தக்க 4 வாலிபர்கள் அவரை பின்தொடர்ந்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததும், பின்னர் அவர் அணிந்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள நகையை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சுந்தரவேல் என்பவர் காடாம்புலியூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் காடாம்புலியூரில் உள்ள முந்திரி காட்டுக்கு சென்ற போலீசாரை அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர் போலீசாரை தாக்கினார். சுதாரித்துக்கொண்ட பண்ருட்டி ஆய்வாளர் வேலுமணி துப்பாக்கியால் சுந்தரவேலின் காலில் சுட்டார். இதில் அவரது இடது காலில் குண்டு பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரால் தாக்கப்பட்ட இரண்டு போலீசாருக்கும் அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மூதாட்டி பாலியல் வழக்கில் ஒருவர் சிக்கிய நிலையில் மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்