திருச்சி மாவட்டம், முசிறி திருமுருகன் நகர் பேருந்து நிலைய பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் அவ்வழியாக சென்றுள்ளனர். அப்போது சுப்பிரமணியனும் அவரது நண்பரும் கணேசனை முறைத்தபடி சென்றதாக கூறப்படுகிறது. என்னை எதற்காக முறைக்கிறீர்கள்? என்று கணேசன் அவர்களிடம் கேட்டுள்ளார். இதில், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கணேசன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து சுப்பிரமணியனை நெஞ்சு மற்றும் முதுகில் குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் முசிறி அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் முசிறியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் முசிறி போலீசார் வழக்கு பதிந்து கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.