Rock Fort Times
Online News

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம்..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் வருகிற ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் இன்று(16-06-2025) நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசினார். தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், நிகழ்வில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார்.
அவர் பேசுகையில், “மக்களின் குறைகளைத் தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே ஜூலை 15 தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும். நகரப் பகுதிகளில் 3 ஆயிரத்து 768 முகாம்கள், கிராமப் பகுதிகளில் 6 ஆயிரத்து 232 முகாம்கள் என்று மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் எல்லாவற்றிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். நகரப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகள், திட்டங்கள் உங்களைத் தேடி வரும். இதுவே கிராமப் பகுதிகளில் 14 அரசுத் துறைகளின் 46 சேவைகளை நீங்கள் பெறலாம். இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் இந்த முகாம்களில் உங்களின் விண்ணப்பங்களை நிச்சயமாக தரலாம். அந்த விண்ணப்பங்கள் மேல் 45 நாள்களுக்குள் முடிவெடுக்கப்படும். ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடக்கும். இத்தனை துறைகள், சேவைகள், திட்டங்கள் இதில் எப்படி விண்ணப்பிப்பது? என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். உள்ளூர் அளவில் இதற்கான தன்னார்வலர்கள் உங்கள் வீடுதேடி வந்து, உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் பற்றி உங்களுக்கு விளக்குவார்கள். எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்ன சான்று, ஆவணங்கள் எல்லாம் இணைக்க வேண்டும்? தகுதி வரம்பு என்ன? இப்படிவழிகாட்டுதல்களும் உங்கள் வீட்டிற்கே வந்து கொடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.
விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மெய்ய நாதன், சிவசங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்