Rock Fort Times
Online News

ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி.ஜெயராம் கைது- * 200 பேருடன் வந்தால் பயந்து விடுவோமா? பூவை ஜெகன் மூர்த்திக்கு நீதிபதி சரமாரி கேள்வி…!

ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., (ஆயுதப்படை பிரிவு) ஜெயராமை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கத்துடன், காதலனின் தம்பியான சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பூவை ஜெகன்மூர்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு, திருவள்ளூர் எஸ்.பி., தலைமையிலான போலீசார் சென்றனர். அப்போது, அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் திரண்டு போலீசாருக்கு இடையூறு செய்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகிவிட்டார். இதனிடையே இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரியிருந்தார். வழக்கு விசாரணையின் போது, பூவை ஜெகன் மூர்த்தி மட்டுமின்றி ஏ.டி.ஜி.பி., ஜெயராமிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் இன்று(16-06-2025) மதியம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். அதன்படி ஏடிஜிபி ஜெயராம், பூவை ஜெகன்மூர்த்தி இருவரும் இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து காவலில் வைக்க உத்தரவிட்டார். எம்.எல்.ஏ., பூவை ஜெகன் மூர்த்திக்கு கடுமையான கேள்விகளை நீதிபதி எழுப்பினார். இந்த வழக்கு விசாரணையில், 200க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம். நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள். விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள். விசாரணைக்கு தனியாக வர வேண்டும். கட்டப்பஞ்சாயத்து செய்யவா உங்களை மக்கள் ஓட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பினார்கள் என்று நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கு ஜூன் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று கூறினார். ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட
நிலையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்