திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரில், மரவனூர் பெரிய குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நிகழாண்டு பெய்த பருவமழை காரணமாக குளம் முழுவதுமாக நிரம்பியது. பின்னர் குறிப்பிட்ட அளவு தண்ணீர் குறைந்த நிலையில் மீன்பிடித் திருவிழா இன்று( ஜூன் 16) நடைபெற்றது. அப்போது பெரிய வலைகளையும், சிக்கு வலைகளையும் பயன்படுத்தி மீன்பிடித்து விற்பனை செய்ய அனுமதி இல்லை என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மீன்பிடி திருவிழா காலை 6 மணிக்கு துவங்கியது. மரவனூர் செடல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர் முக்கியஸ்தர் கபில்தேவ் குளத்தின் கரையில் இருந்து வெள்ளை நிறத்துண்டை தலைக்கு மேல் சுழற்றி மீன்பிடிக்க உத்தரவு வழங்கியதை தொடர்ந்து மீன்பிடி உபகரணங்களுடன் தயாராக நின்றிருந்த பொதுமக்கள் குளத்தில் இறங்கி போட்டி போட்டுக் கொண்டு மீன்பிடிக்கத் துவங்கினர். இதில் கட்லா, விரால், குரவை, ஜிலேபி கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியோடு எடுத்துச் சென்றனர். இந்த திருவிழாவில் மரவனூர், குளவாய்ப்பட்டி, களராம்பட்டி, தெற்குகளம், இடையபட்டி உள்ளிட்ட சுற்றுப்புற 18 பட்டி கிராமங்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள கரூர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பெரிய அளவிலான மீன்கள் கிடைக்கவில்லை என்றாலும் போதிய அளவு மீன்கள் சிக்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Comments are closed.