Rock Fort Times
Online News

வைகோ உட்பட தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவி காலம் முடிகிறது- ஜூன் 19-ம் தேதி தேர்தல்…!

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், வருகிற ஜூன் 19 -ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்கள் பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் வருகின்ற ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்தநிலையில், 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகிற ஜூன் 19-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக ஜூன் 9-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும், வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜூன் 12 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை பதவிக்கு போட்டி நடைபெறும் பட்சத்தில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 19 மாலை 5 மணிக்கு எண்ணி முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திமுக சார்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கறிஞர் வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் கொடுக்கப்படுமா?, அன்புமணி மீண்டும் போட்டியிடுவாரா? என்பது விரைவில் தெரியவரும்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்