சபரிமலையில் பக்தர்களுக்கான தரிசன வழி மாற்றம் * இனி 20 விநாடிகள் முதல் 25 விநாடிகள் வரை தரிசனம் செய்யலாம்…!
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதத்தின் (மலையாள மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷூ, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இந்த கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். அவ்வாறு செல்லும் போது கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இதனால் ஐயப்பனை நீண்ட நேரம் தரிசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்ட கோவில் நிர்வாகம் சபரிமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தரிசன வழியை மாற்றி அமைத்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மார்ச் 14ம் தேதி பங்குனி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. அதன்பின்னர் 15ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை தினமும் பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களிடம் கூறுகையில், பங்குனி மாத பூஜையின் போது பக்தர்கள் 18ம் படி ஏறி கொடிமரத்தி இருந்து நேராக கோவிலில் நுழைந்து சாமி தரிசனம் செய்யலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இனி மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்ய ஆகும் நேரம் மிச்சப்படும். தற்போதைய சூழலில் 80 சதவீதம் பக்தர்களுக்கு முழு தரிசனம் கிடைக்காமல் இருந்தது. எதிர்காலத்தில் அப்படி இருக்காது. இந்த நடைமுறை மூலம் ஒவ்வொரு பக்தரும் 20 விநாடிகள் முதல் 25 விநாடிகள் வரை தரிசனம் செய்யமுடியும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 70வது ஆண்டையொட்டி, ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏப்.1ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.