திருச்சி மாவட்ட கூட்டுறவு துறையை கண்டித்து கருப்புச் சட்டை அணிந்து ரேஷன் கடை ஊழியர்கள் பேரணி- ஆர்ப்பாட்டம்…!
திருச்சி மாவட்டம், அமராவதி கூட்டுறவு கடன் சங்கத்தில் வைப்பு நிதியில் உள்ள முறைகேடுகளை சுட்டிக் காட்டும் பணியாளா்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும், அங்கு பணியாற்றக்கூடிய பணியாளரின் குடும்பத்தினா் மீது கஞ்சா, பொய் வழக்கு போட்டு திருச்சி மாவட்டக் கூட்டுறவுத் துறை பயமுறுத்துவதை கண்டித்து பலமுறை போராட்டம் நடத்தியும், தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. இதனை கண்டித்தும், ரேஷன் கடை செயல்படும் கட்டிடத்துக்கு பணியாளா்கள் வாடகை தர வேண்டும் என்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையை கண்டித்து இன்று (07-01-2025) தமிழ்நாடு ரேஷன் கடை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து கருப்பு சட்டை அணிந்து திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க பேரணியாக சென்றனர். இதற்கு மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மாவட்டத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், மாநில தலைவர் சுகமதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது,மாவட்டத் தலைவர் ரமேஷ் கூறுகையில், இதற்கு நிரந்தர தீா்வு காணாத பட்சத்தில் அடுத்த கட்டமாக மாநிலச் சங்கங்கள் அனைத்தையும் இணைத்து மிகப் பெரிய அளவில் கவன ஈா்ப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்றாா்.
Comments are closed.