Rock Fort Times
Online News

அம்பேத்கர் குறித்து இழிவாக பேசிய அமித்ஷாவை கண்டித்து வருகிற 28ம் தேதி அகில இந்திய அளவில் போராட்டம்- திருச்சியில் திருமாவளவன்…!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வேல்முருகன் திமுக கூட்டணியில் நீடிப்பார் என நம்புகிறேன். நீடிக்க வேண்டும் என விரும்புகிறேன். சிதறி கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற விருப்பத்தை டிடிவி தினகரன் வெளிப்படுத்தி இருக்கிறார். பாஜக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்பதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கனவே உணர்த்தி உள்ளார்கள். ஏழை, எளிய மக்களை பாதிக்காத வகையில் பத்திரப்பதிவு விலை உயர்வு இருக்க வேண்டும். திமுக கூட்டணி சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. அதனால் அவர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்து வருகிறார்கள். அது மகிழ்ச்சியான விஷயம்தான். 2019, 2021, 2024-ம் ஆண்டு பொது தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெற சிறுபான்மை வாக்குகள் பெரும் அளவில் உதவியது. அதன் காரணமாகவே சீமான் அவ்வாறு பேசியுள்ளார். அவர் ஆதங்கத்தில் சொன்னால் கூட அவர் உண்மையை தான் கூறி உள்ளார்.

இஸ்லாமியர்கள் வி.சி.க வை பெரிதும் நம்புகிறார்கள். வாக்களித்தும் வருகிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவாக நடக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டுமானால் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் வெளிப்படையாகவே கூறினார். அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நாங்களும் உடன் இருந்தோம். புதிய கல்விக் கொள்கையின்படி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டையும் படியுங்கள். மூன்றாவதாக இந்தியையும் படியுங்கள் என உள்ளது. அதை மத்திய கல்வி அமைச்சரும் வலியுறுத்தினார். அவர் செய்தது நிர்பந்தம் தான். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நாங்கள் சுட்டிக்காட்டி கண்டித்துள்ளோம். அம்பேத்கர் தோல்வியடைய சாவர்க்கர் தான் காரணம் என்பதை அம்பேத்கரே கூறியுள்ளார். அதற்கான குறிப்புகளும் உள்ளது. பாஜகவை சார்ந்தவர்கள் தான் உண்மையை திரித்து காங்கிரஸ்தான் அம்பேத்கரை தோல்வி அடைய செய்தது என பொய்யை பரப்பி வருகிறார்கள். அம்பேத்கர் குறித்து இழிவாக பேசிய அமித்க்ஷாவை கண்டித்து டிசம்பர் 28ம் தேதி அகில இந்திய அளவில் அம்பேத்கர் இயக்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த உள்ளோம். சென்னையில் விசிக சார்பில் போராட்டம் நடைபெறும். அந்தப் போராட்டத்தில் ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்க உள்ளோம். தமிழகத்தில் போதை பொருள் கலாச்சாரம் பெருகி வருகிறது. இதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும். திமுக மீது வி.சி.கவிற்கு எந்த அதிருப்தியும் இல்லை என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்