கோவையில் காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பே தற்கொலை செய்து கொள்ளவோம் என திருநங்கைகள் தெரிவித்துள்ளனர். கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் திருநங்கைகள் வசூலில் ஈடுபடும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் டாடாபாத் பகுதியில் காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நித்யா என்பவர் வாகன ஒட்டிகளிடம் வசூலில் ஈடுப்பட்டு கொண்டிருந்தார். அந்நிலையில் ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் அவரிடம் இரவு நேரத்தில் பணம் வசூலிக்க கூடாது என அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் காவல் ரோந்து வாகனத்தை மறித்து வாகனத்தை சேதப்படுத்தி, தன்னையும் தாக்கியதாகவும் கூறி அந்தப் பெண் காவலர் நித்தியா உட்பட பத்துக்கு மேற்பட்ட திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து வழக்கு சம்பந்தப்பட்ட விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது. அப்போது விசாரணைக்காக சென்ற திருநங்கைகளை காவல்துறையினர் அவமரியாதையுடன் நடத்தியதாகவும், அந்தப் பெண் காவலரை நாங்கள் தாக்காமலேயே தாக்கியதாக பொய் வழக்கு பதிவு செய்வதாகவும், கூறி நியாயம் கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு அளித்தனர். மனு அளிக்க வந்த பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் காவல்துறையினர் தொடர்ந்து தங்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும், இதே நிலைத் தொடர்ந்தால் தாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பே தற்கொலை செய்து கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். எனவே தங்கள் மீது பொய் வழக்கு போட வேண்டாம் என கேட்டுக்கொண்ட திருநங்கைகள் தங்களுக்கு ஏதேனும் வேலை வாய்ப்பை உருவாக்கி தர மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு சுயதொழில் வேலை வாய்ப்பை உருவாக்கி தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
