சமயபுரம் அருகே 10 கிலோ தங்கம் கொள்ளை சம்பவத்தில் 97 சதவீத நகைகள் மீட்பு…- திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினம் பேட்டி..!
10 கிலோ தங்கம் கொள்ளை சம்பவத்தில் 97 சதவீத நகைகள் மீட்கப்பட்டுள்ளது என்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தெரிவித்தார். திருச்சி, சமயபுரம் அருகே சென்னையை சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் சென்ற காரை ஒரு கும்பல் வழிமறித்து, மிளகாய்பொடி தூவி ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கார் டிரைவர் பிரதீப்(வயது 24), அவருடைய நண்பர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அனுமன்ராம்(21), கைலாஷ்(20), வினோத் என்ற பன்னாராம்(31), முகமது சோகைல்(21), மனோகர்ராம்(27), மணீஸ்சிரோகி(19), மங்கிலால் கனாராம் (22) மற்றும் விக்ரம் ராம்நிவாஸ் ஜாட் (18) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் தங்க நகைகளுடன் மங்கிலால் கனாராம், விக்ரம் ராம்நிவாஸ் ஜாட் ஆகியோர் மும்பைக்கு தப்பி சென்றனர். பின்னர் இவர்களில் 7 பேரை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்து நகைகளை கைப்பற்றினர். மேலும், வட மாநிலத்தைச் சேர்ந்த கணவன்- மனைவி உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஆக மொத்தம் இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இன்று(அக்.10) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தக் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கார் ஓட்டுநர் பிரதீப் தான். இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து 9.9 கிலோ நகைகள் மற்றும் பணத்தை மீட்டுள்ளோம். கொள்ளையடிக்கப்பட்டதில் 97 சதவீதம் நகை மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது தமிழ்நாட்டில் வேறு வழக்குகள் இல்லை. ஐந்து பேருக்கு வட மாநிலங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments are closed.