திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பெரிய கடை வீதி, சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில், ஜோசப் என்பவர் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் பழைய நகைகளை வாங்கி உருக்கி மூக்குத்திகளாக செய்து பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பணி முடித்து பட்டறையை மூடிவிட்டு வழக்கம் போல் வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது . உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 950 கிராம் நகைகள், ரூ1.5 லட்சம் மற்றும் 1.5 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து ஜோசப் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் துணை ஆணையர் அன்பு மற்றும் உதவி ஆணையர் நிவேதா லஷ்மி ஆய்வாளர் சுலோச்சனா, உதவி ஆய்வாளர் கோபால், உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.மேலும் பழைய குற்றவாளிகள் இருவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கொள்ளை போன நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் ஆகும்.