தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்- 1 பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்கள், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகள், 4,755 தனித்தேர்வர்கள், 137 கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் எழுதவுள்ளனர். இதில் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் கடந்த பிப்.14-ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று (பிப்.19) மதியம் வெளியிடப்பட உள்ளது. பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தேர்வுத் துறையின் http://www.dge.tn.gov.in/ எனும் வலைதளத்தில் சென்று மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் மாணவர்கள் விவரங்கள் சரியாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்து பின்னர் அவற்றை விநியோகம் செய்ய வேண்டும். திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இந்த மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
						 
				 
						

 
      
Comments are closed.