திருச்சியில், உலகத் தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும் என, கடந்த ஜூன் மாதம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து கலைஞர் நூலகம் அமைப்பதற்கான பணிகளை பொதுப்பணித்துறை துவங்கியது. அதன் அடிப்படையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே 4.5 ஏக்கர் நீளம் தேர்வு செய்யப்பட்டது. சுமார் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப் பிரம்மாண்டமாக இந்த நூலகம் அமைக்கப்படுவதற்கான திட்டப் பணிகள் துவங்கப்பட்டன. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று ( மார்ச் -21) காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ.வேலு, திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப் குமார் தமிழக முதல்வருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், மண்டலத்தலைவர் மு.மதிவாணன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் அமைய உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது அவர்கள் தெரிவித்ததாவது., ” தமிழகத்தில் மதுரைக்கு அடுத்தபடியாக திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அமைய உள்ளது. குறிப்பாக 18 ஆயிரத்து 304 சதுர மீட்டரில் தரைத்தளம் அமைகிறது. இந் நூலகம் மொத்தம் 8 மாடிகளாக அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு தளத்திலும் நகரும் எஸ்கலேட்டர், லிஃப்ட் வசதிகள் போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. தமிழ், ஆங்கில புத்தகங்கள் தனித்தனியாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பிரிவும், அறிவியல் மையம், விளையாட்டு மற்றும் ரோபோடிக்ஸ் பிரிவு, ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் பிரிவு, அறிவு சார் மையம் உள்ளிட்ட பிரிவுகள் அமைய உள்ளது. டெல்டா மாவட்டங்களின் பெருமையை விளக்கும் விதமாக ஒரு ஆர்ட் கேலரி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதே போல ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட மீட்டிங் ஹாலும் அமைக்கப்பட உள்ளது. இதன் கட்டுமான பணிகள் ஜனவரி 2026 இல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் திட்டங்கள் விரைவுப்படுத்தப்பட உள்ளன ” என தெரிவித்தனர்.
Comments are closed.