Rock Fort Times
Online News

கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு வழக்குகளில் 69 பேர் கைது : திருச்சி மாநகர காவல் ஆணையர் எம்.சத்திய பிரியா ஐபிஎஸ் தகவல்!

திருச்சி மாநகர காவல் ஆணையர் எம்.சத்திய பிரியா ஐ.பி.எஸ் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடும் கெட்ட நடத்தைக்காரர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதன்படி, திருச்சி மாநகரத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு, கடந்த ஒரு வாரத்தில் பள்ளி கல்லூரிகள் அருகாமையிலும் மற்றும் பொது இடங்களில் கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்த 6 நபர்கள் மீது எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் 5 வழக்குகளும், கேகேநகர் காவல் நிலையத்தில் 1 வழக்கு உட்பட 6 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஒரு வாரத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 15 நபர்கள் மீது கண்டோன்மெண்ட், ஸ்ரீரங்கம், பாலக்கரை காவல் நிலையங்களில் தலா 2 வழக்குகளும், அமர்வுநீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூர், பொன்மலை, காந்திமார்க்கெட், உறையூர் ஆகிய காவல் நிலையங்களில் தலா 1 வழக்கு உட்பட 11 லாட்டரி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 139 துண்டுசீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.6380/- பணத்தை கைப்பற்றி, குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக மதுபான பாட்டில் விற்பனை செய்ததாக 48 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 402 மதுபாட்டில்கள் (மதிப்பு சுமார் ரூ.55000/-) கைப்பற்றி, குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்டநடத்தைக்காரர்கள், வழிப்பறி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எம்.சத்திய பிரியா ஐ.பி.எஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா ,லாட்டரி போன்ற பல்வேறு வழக்குகளில் இதுவரை 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்