மணப்பாறை அருகே 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. தனியார் பள்ளி நிர்வாகிகள் உள்பட 4 பேர் கைது ! பள்ளியை அடித்து நொறுக்கிய உறவினர்கள் ( வீடியோ இணைப்பு )
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள மணப்பாறைபட்டியில் குரு வித்யாலயா என்கிற தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தபள்ளியில் பயிலும் 4 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளியின் அறங்காவலரும், தாளாளர் சுதாவின் கணவருமான வசந்தகுமார் (54) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து மாலையில் பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று வசந்தகுமாரை சமாரியாக தாக்கினர். தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதுடன் வசந்த குமாரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி, மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பள்ளிக்குள் புகுந்து அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த கார் கண்ணாடியையும் அடித்து உடைத்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட பள்ளியின் தாளாளர், நிர்வாகிகள், முதல்வர் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் செல்வநாகரெத்தினம் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியானபள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகளான மராட்ச்சி, செழியன், சுதா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலெட்சுமியை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மணப்பாறையில் மாலையிலிருந்து நள்ளிரவு வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.