Rock Fort Times
Online News

அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் 5 பேருக்கு 2வது முறையாக ஜாமீன் மறுப்பு.

திருச்சி காவல் நிலையத்தில் புகுந்து எம்.பி. சிவா ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நேரு ஆதரவாளர்கள் ஜாமீன் மனு இரண்டாவது முறையாக திருச்சி இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களும் எம்.பி சிவா ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் அனைவருக்கும் நினைவு இருக்கலாம். இது தொடர்பாக திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்.பி சிவா ஆதரவாளர்கள் மீது நேருவின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பெண் காவலருக்கு காயம் ஏற்பட்டது. காவல் நிலையத்தில் இருந்த கணினி, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன. இச்சம்பவத்தில் தொடர்புடைய திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான காஜாமலை விஜய், திமுக துணைச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான முத்துச்செல்வம், அந்தநல்லூர் ஒன்றிய தலைவரும், மாவட்ட பொருளாளருமான துரைராஜ், 55வது வட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான ராம்தாஸ் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். இதைத் தொடர்ந்து காஜாமலை விஜய், முத்து செல்வம், ராம்தாஸ், துரைராஜ், திருப்பதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐந்து பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் திருச்சி இரண்டாவது ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் 5 பேருக்கும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் பாலாஜி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். நேரு ஆதரவாளர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் ஆஜரானார். இதைத் தொடர்ந்து இன்று ஓம் பிரகாஷ் ஜூனியர் அதே நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார் .இந்த மனுவை மாஜிஸ்திரேட் பாலாஜி இன்று தள்ளுபடி செய்தார்.இதன் மூலம் இரண்டாவது ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஜாமீன் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்