திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போலீஸார் இன்று ( 12.10.2023 ) நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் மற்றும் ரவுடி சதீஷ் என்று இருவர் கொல்லப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் பிடிக்க முயன்றபோது, போலீஸாரை தாக்கி தப்பிச் சென்றதை அடுத்து என்கவுன்ட்டரில் ரவுடிகள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார்.
ரவுடி முத்து சரவணன் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக ஏழு கொலை வழக்குகள் அவர்மீது உள்ளன. இதுமட்டுமின்றி இவர் சோழவரம் பகுதியில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் பாடியநல்லூர் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் பார்த்திபன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு ரவுடி முத்து சரவணன் மூளையாக செயல்பட்டார் என வழக்கு பதியப்பட்ட நிலையில் செங்குன்றம் காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்திவந்தனர். இந்தக் கொலை தொடர்பாக ஏற்கனவே 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். ஆனால் முத்து சரவணன் தலைமறைவாகி இருந்த நிலையில் அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். டெல்லியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து சோழவரம் அழைத்துச் செல்லும் வழியில் மீஞ்சூர் – வண்டலூர் சாலையில் போலீஸாரை தாக்கிவிட்டு அவர் தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, ரவுடி முத்து சரவணனும், அவருடன் இருந்த மற்றொரு ரவுடி சதீஷ் என்பவரும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தற்காப்புக்காக என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதில் முத்து சரவணன் நிகழ்விடத்தில் உயிரிழந்ததாகவும், காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சதீஷ் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் செங்குன்றனம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ரவுடிகள் முத்து சரவணன் மற்றும் சதீஷ் தாக்கியதில் காவலர்கள் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனிடையே, என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் முத்து சரவணன் மற்றும் சதீஷ் ஆகியோரது உடல்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.