வீட்டில் மாவா தயாரித்த அதிமுக வட்டச் செயலாளர் உட்பட 2 பேரை தண்டையார்பேட்டை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ஒரு வாடகை வீட்டில் மாவா( பீடாவில் ஒருவகை) தயாரித்து விற்கப்படுவதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு மாவா தயாரிக்க பயன்படும் ஜர்தா 36 கிலோ, சீவல் 25 கிலோ, கலர் பவுடர் ஒரு பெட்டி, எடைபோடும் இயந்திரம், பார்சல் கவர்கள், மிக்ஸி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், 5 கிலோ மாவாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சட்ட விரோதமாக மாவா தயாரித்து விற்றதாக கொருக்குப்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த சந்திரசேகர் (வயது 49), தண்டையார்பேட்டை கருணாநிதி நகரைச் சேர்ந்த சிமியோன் (37) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இருவரும், அங்கு மாவா தயாரித்து கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. கைதான சந்திரசேகர் அதிமுக 47-வது வட்டச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.