இளைஞர் அணி செயலாளர் பதவி பறிப்பு: தே.மு.தி.க.வில் இருந்து விலகப் போவதாக முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி அதிரடி…!
தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக முன்னாள் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நல்லதம்பி இருந்து வந்தார். கடந்த மாதம் 30-ந் தேதி தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் நடைபெற்ற தே.மு.தி.க. தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அவரிடம் இருந்து அந்தப் பதவி பறிக்கப்பட்டு, விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பதிலாக நல்லதம்பிக்கு கட்சியில் உயர்மட்டக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த நல்லதம்பி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், உயர்மட்டக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும், பொறுப்பில் இருந்து விடுவிக்காத பட்சத்தில் கட்சியில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தே.மு.தி.க. பொதுச் செயலாளருக்கு ஒரு தொண்டனின் கடிதம். ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டிருக்கும் எங்களின் குடும்பத் தலைவர் கேப்டன் விஜயகாந்தை வணங்கி தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு வணக்கத்துடன் எழுதிக் கொள்வது. கட்சியின் உண்மை விசுவாசி ஆகிய நான் கட்சித் தலைவர் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டவன். நான் என்றென்றும் தலைவர் குடும்பத்தாருக்கும், தே.மு.தி.க.வுக்கும் என்றும் நன்றியுடனும், விசுவாசத்துடனும் இருப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். விஜய பிரபாகரன் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும்.
நான் மன்றத்திலும், கட்சியிலும் என்னால் முடிந்தவரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பான முறையில் தங்களிடம் கெட்ட பெயர் வாங்காமல் இயக்கத்திற்காகவும் கேப்டனின் குடும்பத்திற்காகவும் என்னால் முடிந்த வரை செயல்பட்டு வருகிறேன். விஜய பிரபாகரனுக்கு கட்சி இளைஞரணி செய்லாளராக அறிவித்தமைக்கு என்னுடைய உளமாற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தம்பியின் குரல் தமிழக சட்டப் பேரவையில் கழகத் தலைவர் விஜயகாந்த் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாழ்த்தி மகிழ்கிறேன். அறிந்தோ அறியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இயக்கத்தில் இருந்து என்னை விடுவித்தாலும் என்றுமே நான் தங்களுடைய பிள்ளை. என்றைக்கும் நான் கட்சியின் கடைகோடி தொண்டன் என்பதை என் உதிரத்தின் ஒவ்வொரு துளியும் சொல்லும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொண்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கும், பொருளாளர் எல்.கே.சுதீஷூக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.எனக்கு கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி விடுவிக்காத பட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன் என்று தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நான் எந்தவித மன வருத்தத்திலும் கூறவில்லை மன மகிழ்ச்சியோடுதான் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.