1,299 ரூபாய் இருந்தால் போதும் விமானத்தில் பறக்கலாம்- கட்டண சலுகையை அறிவித்தது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’…!
எப்படியாவது வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறந்து விட வேண்டும் என்பது ஏழை, எளிய மக்களின் கனவாக உள்ளது. அந்தக் கனவை மெய்யாக்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் முன் வந்துள்ளது. உள்நாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட் கட்டண சலுகையை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனம், உள்நாட்டு விமான சேவைகளை அதிகரிக்கும் வகையில், புதிய திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்தவகையில், ‘எக்ஸ்பிரஸ் லைட்’ திட்டம் 1,299 ரூபாயில் இருந்து துவங்குகிறது. இது உள்நாட்டு பயணத்திற்கு பொருந்தும். இதில், கூடுதல் உடைமைகளை எடுத்துச் செல்ல முடியாது. இதேபோல, ‘எக்ஸ்பிரஸ் வேல்யூ’ திட்டம் 1,499 ரூபாயில் இருந்து துவங்குகிறது. பயணியர் இந்த சலுகைகளை பெற ஆகஸ்ட் 7ம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆக., 11 முதல் செப்., 21ம் தேதி வரை இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். மாணவர்கள் மற்றும் முதியோருக்கு விமான ‘டிக்கெட்’ கட்டணத்தில், குறிப்பிட்ட தள்ளுபடிகள் உள்ளன. இவை அனைத்தும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. கூடுதல் விபரங்களை, ‘airindiaexpress.com’ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.