கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஒரு ரூபாய் அனுப்பியவுடன் விண்ணப்பதாரர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தவறான வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத் தொகை சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் அனுப்பப்படுவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், தங்களுக்கு குறுஞ்செய்தி வரவில்லை,வீடு வீடாக வந்து ஆவணங்களை சரி பார்க்கவில்லை, மகளிர் உரிமை தொகைக்காக தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறவில்லை என குற்றம் சாட்டி திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் நியாய விலை கடை முன்பு 20க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கக்கோரி கோஷமிட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.