கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 3 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – ஓ.பன்னீர்செல்வம் கேள்வி..!
ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்- வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று (10-01-2024) நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார். புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜ்மோகன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சாமிகண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, எடப்பாடி பழனிசாமிக்கு யார் அதிகாரம் கொடுத்தது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பொதுச் செயலாளர் பதவிக்கு கட்சியில் தேர்தல் நடத்தி தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். கட்சியின் சட்ட விதியும் இதுதான். அந்த சட்ட விதியை மாற்றவோ திருத்தம் செய்யவோ, ரத்து செய்யவோ கூடாது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைய நல்ல வாய்ப்பு இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடம் மு.க.ஸ்டாலின் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை 3 மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்று கூறினார். தற்போது 3 வருடங்கள் ஆகி தாமதமாகி உள்ளது. இதன்மூலம் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் கூட்டணி அமைத்துள்ளார்கள் என்று தமிழக மக்கள் சந்தேகிக்கிறார்கள். தற்போது நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் சரி அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், திருச்சி மாநகர் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் ஜவகர்லால் நேரு, துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, மாவட்ட கழக நிர்வாகிகள், செயல் வீரர்- வீராங்கனைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.