Rock Fort Times
Online News

“லாக்அப் டெத்” குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? – * திருச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி…

இந்தியாவிலேயே முதல்முறையாக, முப் படையில்( ராணுவம், கடற்படை, விமானப்படை) பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திருச்சி மன்னார் புரத்தில் இன்று (ஜூன் 30) நடைபெற்றது. இம்முகாமில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொண்டனர். இந்த முகாமின் மூலம் நூற்றுக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு 1.5 கோடி ரூபாய் நிலுவையில் இருந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. முகாமில் சிறப்பு அழைப்பாளராக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, மத்திய அரசு ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் இதுபோன்ற முகாம்களை நடத்தி வருகிறது. திருச்சியில் நடைபெறும் இந்த மெகா முகாம் மூலம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பயன்பெற்றுள்ளனர். அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் கிராமப்புறங்களில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள். இதுவரை இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் 206 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இன்றைக்கு நமக்கான ஆயுத தளவாடங்களை நாமே தயாரித்துக் கொள்ள முடிகிறது. ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ராணுவ தளவாடங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவ தளவாடங்களை நாமே உற்பத்தி செய்து கொள்கிறோம். பல்வேறு நாட்களாக விடுக்கப்பட்ட கோரிக்கையான இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் பறக்க கூடிய ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏ.ஆர். ரகுமானுடன். சந்திப்பு ஏன்?

மேலும் அவர் கூறுகையில், முதலமைச்சர் செயல்படாததன் விளைவாக லாக்கப் மரணம் நடந்துள்ளது. காவல் நிலையத்திற்கு செல்லவே மக்கள் அச்சப்படுகிறார்கள். துறை அமைச்சர் என்கிற அடிப்படையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோ வை பார்க்க சென்றேன். அவரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை. சரத்குமார் அவருடைய கட்சியை கலைத்து விட்டு பா.ஜ.க வில் இணைந்தார். நடிகை மீனா, பா.ஜ.க விற்கு வந்தால் வரவேற்கதக்கது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி இயங்கும் என்பதை உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாக தெரிவித்துள்ளார் என்று தெரிவித்தார்.

கூட்டணி ஆட்சி குறித்து மாறுப்பட்ட கருத்து உள்ளதே என்ற கேள்விக்கு, எங்கள் கூட்டணி தான் 2026 ல் மிகப்பெரிய வெற்றி பெறும். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது அவர்களின் பாடு. இதில் நான் கருத்து கூற முடியாது. லாக்அப் மரணம் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்கவில்லை. கூட்டணிக்காக தமிழக மக்களின் நலனை திமுக கூட்டணி கட்சிகள் அடகு வைத்து விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்