Rock Fort Times
Online News

ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தின்படி எந்தெந்த பொருட்கள் விலை குறையும்?…

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றுள்ளார். ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைப்பது பற்றியும், வரிகுறைப்பு பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை வருகிற 22-ம் தேதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாதாம் மற்றும் உலர் பழங்கள், பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், ஜாம்கள், நெய், வெண்ணெய், ஊறுகாய், சட்னிகள், டிராக்டர்கள், குளிர்சாதன பெட்டிகள், ஏசி உட்பட சுமார் 175 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைய வாய்ப்பு உள்ளது. ரூ.40 லட்சம் வரை மதிப்புடைய மின்சார வாகனங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க விரும்பும் மத்திய அரசு, மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.தான் விதிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வரிகுறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு இழப்பீடு தரவேண்டும் என்று மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. நெய், 20 லிட்டர் குடிநீர், காற்று செலுத்தப்படாத பானங்கள், தின்பண்டங்கள், சிலவகை காலணிகள், ஆடைகள், மருந்துகள், மருத்துவ கருவிகள் ஆகியவை 12 சதவீத வரியில் இருந்து 5 சதவீத வரிக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றாடம் பயன்படுத்தும் பென்சில், சைக்கிள், குடை, ஹேர்பின் ஆகியவையும் 5 சதவீத ஜி.எஸ்.டி.க்கு மாறுகின்றன. சிலவகை டெலிவிஷன்கள், வாஷிங் மெஷின்கள், பிரிஜ்கள் ஆகியவை 28 சதவீத ஜி.எஸ்.டி.யில் இருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி.க்கு குறைக்கப்படும். எனவே, மேற்கண்ட பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. குறைந்தவிலை கார்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரப்படும். ஆனால், எஸ்.யு.வி. ரக கார்கள் மற்றும் சொகுசு கார்கள் மீது 40 சதவீத சிறப்பு ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். புகையிலை, பான் மசாலா, சிகரெட் ஆகியவற்றின் மீதும் 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். அதனால் அவற்றின் விலை உயரும் என்று தெரிகிறது.

தற்போது பால், முட்டை, தயிர், உப்பு உள்ளிட்ட முக்கிய உணவு சார்ந்த பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தினசரி பயன்படுத்தும் சர்க்கரை, தேநீர் போன்ற பொருள்களுக்கு 5 சதவீதம், வெண்ணெய், நெய், கைப்பேசி போன்ற பொருள்களுக்கு 12 சதவீதம், சோப்பு, தேங்காய் எண்ணெய், ஐஸ்கிரீம் போன்ற பொருள்களுக்கு 18 சதவீதம், தொலைக்காட்சி, குளிர்பதனப்பெட்டி மற்றும் குளிரூட்டிகள் (ஏ.சி.) போன்ற பொருள்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. இந்த சூழலில் மறுசீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதத்துக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்தவுடன் 12 சதவீதத்திற்கு கீழ் வரி விதிக்கப்பட்டு வரும் 99 சதவீத பொருள்கள் 5 சதவீதத்திற்குள் கொண்டுவரப்பட உள்ளன. அதேபோல் 28 சதவீதத்திற்கு கீழ் வரி விதிக்கப்படும் 90 சதவீத பொருள்கள் 18 சதவீத வரி விதிப்புக்குள் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்