திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- * மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் விளக்கம்…!
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று (ஜூன் 30) நடைபெற்றது. துணை மேயர் திவ்யா தனக்கோடி,
ஆணையர் மதுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஆண்டாள் ராம்குமார், ஜெயநிர்மலா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மேயர் பேசுகையில், திருச்சி மாநகரில் சுமார் 40 ஆயிரம் நாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு அதில் 30 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தமிழ்நாட்டிலேயே திருச்சி மாநகராட்சியில் தான் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாதம் 313 கால்நடைகள் பிடிக்கப்பட்டு ரூ.7 லட்சத்து 87 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறக்கப்படவில்லை என்றும், மேரிஸ் பாலம், ஜங்ஷன் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும் இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார். மாநகராட்சியை பொருத்தவரை 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி இருந்தபோது எந்தவித திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. அதன்பிறகு திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட 851 கிலோமீட்டர் பாதாள சாக்கடை பணி மற்றும் 75 கிலோமீட்டர் குடிநீர் திட்டம் போன்றவற்றை திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்தியது. நான்கு ஆண்டுகளில் 2000 கோடிக்கு மேல் வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டு உள்ளது. மாரீஸ் பாலம் இடிக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் செய்து வருவதால் தாமதமாகிறது. அதேபோல ஜங்ஷன் பாலமும் ரயில்வே நிர்வாகத்தால் தாமதமாகிறது. பாலக்கரை மற்றும் ராமகிருஷ்ணா பாலத்தை சரி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முயன்ற போது போலீசார் மாரீஸ் பாலபணி முடிந்த பிறகு மேற்கண்ட இரண்டு பாலத்தை சரி செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்.நிலைமை இப்படி இருக்க அவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒன்றும் செய்யவில்லை என்று கூறுவது சரியானது அல்ல. பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் கடைகள் கட்ட மற்றும் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டி இருப்பதால் தாமதமாகி வருகிறது. என்று தெரிவித்தார்.
கவுன்சிலர்கள் வாக்குவாதம்:
அதனைத்தொடர்ந்து அம்பிகாபதி (அதிமுக) பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எப்போதுதான் பயன்பாட்டுக்கு வரும் என்று கேட்க… திமுக கவுன்சிலர்கள் முத்துசெல்வம், காஜாமலை விஜய், நீலாவேலு ஆகியோர் எழுந்து நின்று மாறி, மாறி பேசினார்கள். அதற்கு அதிமுக கவுன்சிலர்கள் அம்பிகாபதி மற்றும் அரவிந்தன் ஆகியோர் மேயரிடம் கேள்வி கேட்டபோது கவுன்சிலர்கள் பதில் சொல்வது நியாயமா? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு மேயர் அன்பழகன் திமுக கவுன்சிலர்களை அமைதிப்படுத்தினார். பின்னர் கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்சனைகள் குறித்து எடுத்துக் கூறினர்.
கூட்டத்தில் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டு வரும் கனரக சரக்கு வாகன முனையத்தில் அமைக்கப்படும் கடைகளை ஏலம் விடுவது, மாநகராட்சி ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட மருத்துவமனை சாலையில் ரூ.3 கோடி செலவில் முதல்வர் படைப்பகம் கட்டும் பணிக்கு இட அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments are closed.