வீட்டைக் கட்டியது நாம், நிர்வாகம் செய்வது வேறொருவரா?…
தமிழக ஆளுநரை சாடிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...
திருச்சி மாவட்ட, மாநகர திமுக தொண்டரணி சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திரைப்பட கலைஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது:-
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழக அரசு எந்த திட்டத்தை செயல்படுத்த முன்வந்தாலும் இடையூறு வருகிறது. நாங்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. வீடு நம் வீடு, வீட்டை கட்டியது நாம். நாம் தான் வீட்டை நிர்வாகம் பண்ண வேண்டும். ஆனால், மத்திய பாதுகாப்பு படையில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவரை வீட்டு நிர்வாகம் பண்ண வைத்துள்ளனர். வீட்டு சொந்தக்காரர்களையே உள்ளே விடாமல் வைத்திருந்தால் எப்படி இருக்கும். அது போலத்தான் தமிழ்நாட்டில் நடக்கிறது. இது பெரியார் மண், அம்பேத்கார் மண். பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கருணாநிதி ஆகியோரின் மொத்த உருவமாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். நாம் எந்த மசோதாவை அனுப்பினாலும் கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்புகிறார் ஒருவர். அதை நாம் திருப்பி வலியுறுத்தி கொண்டே உள்ளோம். எங்க மாநிலத்திற்கான உரிமையை நாங்கள் கேட்கிறோம். மாநிலத்தின் உரிமை என்னவென்றே தெரியாமல் சிலர் செயல்பட்டு பேசி வருகின்றனர். மக்களின் நலன் சார்ந்து அரசாங்கம் நடத்த வேண்டுமே தவிர, யார் பெரியவர் என்பதை காட்ட வேண்டிய இடம் சட்டமன்றம் அல்ல. மக்கள் எதை நம்பி நமக்காக வாக்களித்தார்களோ அதற்காக பணியாற்றவே சட்டமன்றம் என்பதைத்தான் தமிழக முதல்வர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் தனது பேச்சில், தமிழக ஆளுநர் ஆா்.என்.ரவியைத்தான் இவ்வாறு குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், மாநில திமுக தொண்டரணி செயலாளர் மாஸ்டர் பெ.சேகர், திரைப்பட நடிகர் தம்பி ராமையா, மாநகராட்சி மண்டலம் 3ன் குழு தலைவர் மு. மதிவாணன், மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன், பகுதிச் செயலாளர்கள் மோகன், ஆர்ஜி பாபு, டி.பி.எஸ்.எஸ்.ராஜு, முகமத், மணிவேல், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் உதயகுமார், மாநகர அமைப்பாளர் தினகரன், மாநகரத் தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் மாவட்ட , நகர நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.