எதற்கும் பயப்படுபவர்கள் நாம் கிடையாது, தவறு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும்… * திருச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
திருச்சியில் இன்று (மே 25) மாநில, மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவி.செழியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் ,திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதயம் என்றால் அது இளைஞரணி தான். இளைஞரணியில் சிறப்பாக செயல்பட்டவர்கள் இன்று பல்வேறு பொறுப்புகளில் இருக்கின்றனர். இளைஞர் அணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். நாடாளுமன்ற தேர்தலில் நாம் 40 தொகுதிகளில் வெற்றிபெற இளைஞரணி யினரின் பங்களிப்பு அதிகம்.கலைஞர் நூற்றாண்டையொட்டி இளைஞரணி சார்பில்100 தொகுதிகளில் கலைஞர் நூலகங்களை திறந்து உள்ளோம். பேச்சு போட்டிகள் நடத்தி அதன் மூலமாக இளம் பேச்சாளர்களை தலைமைக்கு வழங்கி உள்ளோம். அந்த இளம் பேச்சாளர்கள் சிறப்பாக பொது கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றனர். இளைஞரணி சார்பில் 234 தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.இல்லந்தோறும் இளைஞரணி என்ற திட்டம் மூலமாக புதிய இளைஞர்களை திமுகவில் சேர்த்து வருகிறீர்கள். நம்முடைய பணி 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி இருக்க வேண்டும்.நமக்கு இருக்கும் நேரம் மிக மிக குறைவு. மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு தேவையான பணிகளை செய்துதர வேண்டும்.நம் முதலமைச்சர் கடும் நிதி நெருக்கடியிலும் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறுங்கள். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து விட்டார்.நம் தலைவர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றால் அதை விமர்சிக்கிறார்.எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றபோது மூன்று கார்கள் மாறி சென்றார். அதிமுக வெற்றிபெற்றால்த மிழ்நாட்டை பாஜகவிற்கு அடக்கு வைத்து விடுவார்கள்.ஆனால், நம் முதலமைச்சர் மாநிலத்திற்கு தேவையான நிதியை பெற டெல்லி சென்று வந்துள்ளார்.எதற்கும் பயப்படுபவர்கள் நாம் கிடையாது. தவறு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும். தலைவர் மீதோ, என் மீதோ யாரும் எந்த தவறும் கூற முடியாது.யாராலும் நம்மை மிரட்ட முடியாது. 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் நாம் வெற்றிபெற பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Comments are closed.