Rock Fort Times
Online News

மாநகராட்சி மற்றும் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு- மாடுகளுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…! (வீடியோ இணைப்பு)

தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சியுடன் இணைத்து தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஆணை பிறப்பித்துள்ளது. அந்தவகையில் லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அப்பாத்துரை, எசனைக்கோரை, புதுக்குடி, தாளக்குடி மற்றும் மாடக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடனும், கீழவாளாடி ஊராட்சியை லால்குடி நகராட்சியுடனும் இணைக்கப்பட உள்ளது. இந்நிலையில் அப்பாத்துரை ஊராட்சியை சேர்ந்த கிராமமக்கள் தங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமாடுகளுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது எங்கள் கிராம ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் கைவிடப்படும். மேலும் மாநகராட்சிக்கு மாதாமாதம் வீட்டு வரிகட்ட வேண்டும். குப்பை வரி கட்ட வேண்டும். காவிரி தண்ணீர் வேண்டும் என்றால் தனி குடிநீர் வரி கட்ட வேண்டும். இதனை கிராம மக்கள் சமாளிப்பது என்பது இயலாத காரியம். ஆகவே, எங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என தெரிவித்ததுடன் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி தாசில்தார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் உங்கள் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.  இதேபோன்று கீழவாளாடி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் லால்குடி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். லால்குடி- திருச்சி நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு சாலை மறியலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அதவத்தூர், குமார வயலூர் ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் வயலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்