நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: ரூ.6 லட்சம் செலவில் வைரத்தில் உருவான விநாயகர் சிலை…!
நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, போலீசாரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள், இந்து அமைப்பினர் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும், வீட்டில் வைத்து வழிபடுவதற்காக பல்வேறு வடிவங்கள், வண்ணங்களில் விதவிதமான சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கர்நாடக மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் வசித்து வரும் மராட்டியத்தை சேர்ந்த மகேஷ் முரகோடா என்ற கலைஞர் வைரத்தில் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார். சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான அமெரிக்க வைரத்தில் இந்த விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.இந்த விநாயகர் சிலையின் எடை 50 கிலோ ஆகும். இந்த விநாயகர் சிலை பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் ராமநகரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் நாடபிரபு கெம்பேகவுடா மித்ரா சபை சார்பில் நிறுவப்படுகிறது. பின்னர் அந்த சிலை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது.
Comments are closed.