Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா-திருச்சியில் ஜனவரி 9-ம் தேதி முதல் போக்குவரத்தில் மாற்றம்…!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக சொர்க்கவாசல் திறப்பு 10-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்சியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் 09.01.2025-ம் தேதி மதியம் 2 மணி முதல் 11.01.2025-ம் தேதி 2 மணி வரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நகரப் பேருந்துகள்

மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் நகர பேருந்துகள் அண்ணாசிலை, ஓடத்துறை பாலம், மாம்பழச்சாலை, காந்தி ரோடு, ஜேஏசி கார்னர், இவிஎஸ் சாலை, வழியாகச் சென்று ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி, பின்பு ஸ்ரீரங்கத்திலிருந்து அம்மாமண்டபம், மாம்பழச்சாலை, காவேரி பாலம், ஓடத்துறை, சத்திரம் பேருந்து நிலையம் செல்லவேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி, மண்ணச்சநல்லூர் மார்க்கம் செல்லும் நகரப் பேருந்துகள் அண்ணாசிலை, ஓடத்துறை பாலம், மாம்பழச்சாலை, திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு, சோதனை சாவடி எண்.6, கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும். திரும்பி வரும்போது திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு வழியாகவே சத்திரம் பேருந்து நிலையம் வரவேண்டும். ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் செல்ல அனுமதியில்லை.

அரசு சிறப்பு பேருந்துகள் தேவைக்கேற்ப மட்டுமே ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் வரவேண்டும். கூடுதலாக வரும் பேருந்துகள் காவல் சோதனைச் சாவடி-6 அருகில் நிறுத்தி வைக்க வேண்டும்.

புறநகர் பேருந்துகள்

சென்னை, அரியலூர், பெரம்பலூர், துறையூர் மற்றும் கடலூர் மார்க்கத்திலிந்து வரும் பேருந்துகள் சோதனைச் சாவடி-6-ல் இருந்து திருவானைக்காவல் வரக்கூடாது. அனைத்து பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் ஓடத்துறை, ஓயாமரி ரோடு வழியாக சென்னை புறவழிச்சாலையில் சென்று வர வேண்டும்.

சரக்கு வாகனங்கள்

ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் பகுதிகளுக்குள் சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதியில்லை. பக்தர்களின் வாகனங்கள், மிக முக்கிய நபர்களின் வாகனங்கள்: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு வரும் மிக முக்கிய நபர்கள் மாம்பழச்சாலை, அம்மாமண்டபம் ரோடு, ராகவேந்திரா ஆர்ச், பீட்-38 வந்து மேலவாசல் வழியாக மேல சித்திரை வீதி, மேல உத்திரை வீதி, வடக்கு உத்திரைவீதி, கிழக்கு உத்திரை வீதி, ரங்கா ரங்கா கோபுரம் வந்து மிக முக்கிய விருந்தினர்களை இறக்கி விட்டு மீண்டும் கிழக்கு உத்திரை வீதியில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

முக்கிய நபர்களுக்கான வாகன அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்கள்:

முக்கிய நபர்களுக்கான அனுமதி சான்று உள்ள வாகனங்கள் மாம்பழச்சாலை அம்மாமண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மேலவாசல் வழியாக வந்து மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு சித்திரை வீதியில் நிறுத்த வேண்டும். பின்னர் வடக்கு சித்திரை வீதி வழியாக வடக்கு வாசல் சென்று பஞ்சக்கரை வழியாக வெளியே செல்ல வேண்டும்.

இதர வாகன அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்கள்:

இதர அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்கள் மாம்பழச்சாலை அம்மாமண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மேலவாசல் அருகில் உள்ள மூலத்தோப்பு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும். சுவாமி தரிசனம் முடிந்த பின்னர் நெடுந்தெரு மந்தை, தசாவதாரம் சன்னதி வழியாக பஞ்சக்கரை சென்று வெளியே திரும்பிச் செல்ல வேண்டும்.

குடியிருப்போர் வாகனங்கள்

உத்திரை வீதி மற்றும் சித்திரை வீதியில் குடியிருப்போருக்கான வாகனங்கள் அனைத்தும் கிழக்கு மற்றும் வடக்கு சித்திரை வீதியில் நிறுத்த வேண்டும்.

காவல்துறை வாகனங்கள்

காவல் துறை அதிகாரிகளின் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கீழ சித்திரை வீதி மற்றும் தெற்கு சித்திரை வீதியில் மட்டும் நிறுத்த வேண்டும்.

வாகன அனுமதிச்சீட்டு இல்லாத வாகனங்கள்

பேருந்துகள் பால்பண்ணை – சஞ்சீவிநகர் சந்திப்பு – “Y” ரோடு சந்திப்பு – காவல் சோதனை சாவடி எண்.6 பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் வெளியே செல்ல வேண்டும். வேன்களில் வரும் பக்தர்கள் ஓடத்துறை பாலம் வழியாக, காவேரி பாலம், மாம்பழச்சாலை சந்திப்பு, திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு, ஸ்ரீ ஹோட்டல், அம்பேத்கர் நகர், சங்கர் நகர் வழியாக சிங்கபெருமாள் கோயில் மைதானத்தில் வேன்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். சுவாமி தரிசனம் முடித்த பின்னர் அதே வழியாக வெளியே திரும்பிச் செல்ல வேண்டும்.

இரண்டு சக்கர வாகனங்கள்:

1) மாம்பழச்சாலை, அம்மா மண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு, தெப்பக்குளம் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியாக திரும்ப வெளியே செல்ல வேண்டும்.

2) மாம்பழச்சாலை, திருவானைக்கோயில் ஜங்சன், நெல்சன் ரோடு, ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரி மைதானம் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, பின்னர் பஞ்சக்கரை வழியாக திரும்ப வெளியே செல்ல வேண்டும்.

3) கொள்ளிடம் பாலம், பஞ்சக்கரை ரோடு -பஞ்சக்கரை ரோடு – யாத்ரி நிவாஸ் – கொள்ளிடம் முருகன் கோவில் – தெப்பக்குளம் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் அதே வழியாக வெளியே செல்ல வேண்டும்.

மூன்று சக்கர வாகனங்கள் (ஆட்டோ)

1) மாம்பழச்சாலை, அம்மா மண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு, நெடுந்தெரு வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியாக திரும்ப வெளியே செல்ல வேண்டும்.

2) கொள்ளிடம் பாலம், பஞ்சக்கரை ரோடு யாத்ரி நிவாஸ் – தசாவதார சன்னதி நெடுந்தெரு வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் அதே வழியாக வெளியே செல்ல வேண்டும்.

மேலும் இந்த வருடம் சுமார் 3 லட்சத்திற்குமேல் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் வெளியூர் காவல்துறை அதிகாரிகள், போலீசார் சுமார் 2000 பேருக்குமேல் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட்டு உள்ளார்கள். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை சித்திரை வீதி மற்றும் உத்திர வீதியில் நிறுத்த அனுமதியில்லை. பக்தர்கள் காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு மாநகர காவல் ஆணையர் த.ந.காமினி கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்