திமுக கூட்டணியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ராஜ்யசபா எம்பி சீட் ஒதுக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று ( மே.30 ) நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ மதிமுக தலைவர் வைகோவிற்கு எம்பி சீட் மறுக்கப்பட்டது குறித்து பேசினார்.,, 61 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரரான வைகோ, தனது பொது வாழ்க்கையில் நதிநீர் இணைப்பு, மே 1 ஊதியத்துடன் விடுமுறை, என்எல்சி தனியார்மயமாதலை தடுத்தது, ரயில்களில் டிடிஆர்களுக்கு படுக்கை வசதியை கொண்டு வர செய்தது, நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க குரல் கொடுத்தது, ஈழத் தமிழர்களுக்காக போராடியது போன்ற எண்ணற்ற மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். அப்படிப்பட்ட எங்கள் தலைவர் வைகோவிற்கு திமுக கூட்டணியில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்பளிக்காதது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.இருப்பினும் தமிழக நலன் சார்ந்து திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து பயணிக்கும். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி, எந்தெந்த மாவட்டங்களில் கட்சி பலமாக இருக்கிறதோ அங்கெல்லாம் எங்களுக்கு வேண்டிய சீட்டுகளை கேட்டுப் பெறுவோம்.வருகிற ஜூன் 22ம் தேதி நடைபெற உள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்க உள்ளோம் என்று தெரிவித்தார். இச்சந்திப்பின்போது மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்
Comments are closed.