Rock Fort Times
Online News

திருமாவளவனுடன் வைகை செல்வன் திடீர் சந்திப்பு- அதிமுக கூட்டணிக்குள் இழுக்க முயற்சியா?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் முழுமையாக இருக்கும் நிலையில் இப்போதே கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட தொடங்கி விட்டன. பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்படியே நீடிக்கின்றன. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அதிகமான தொகுதிகளை கேட்போம் என மதிமுக, சிபிஎம். மற்றும் விசிக இப்போதே நெருக்கடி கொடுக்க தொடங்கி விட்டன.
இதுதொடர்பாக அண்மையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், பில்டிங் ஸ்டிராங்… பேஸ்மட்டம் வீக் என்பதைப் போல திமுக கூட்டணி இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.மேலும், அதிமுக மாபெரும் கூட்டணி அமைக்கும் என்றும் கூறினார். இந்தநிலையில் திருச்சியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனை அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தான் எழுதிய “பேசு பேசு நல்லா பேசு” என்ற புத்தகத்தை திருமாவளவனிடம் வழங்கினார் வைகை செல்வன். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனை வைகை செல்வன் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியை அதிமுக கூட்டணிக்கு கொண்டுவர முயற்சி நடக்கிறதா என்றும் பேசப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்