திருச்சி உறையூரில் அருள்பாலித்து வரும் வெக்காளியம்மன் கோவில் மூலஸ்தானத்தில் அருள் பாலிக்கும் வெக்காளியம்மன் வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் தன்னகத்தே தாங்கிக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். இக்கோவிலில் திருத்தேர் உற்சவம் ,சண்டி ஹோமம், லட்சார்ச்சனை ஆண்டுதோறும் பக்தர்களின் முக்கியத்துவத்துடன் நடைபெற்றாலும் அதே முக்கியத்துவத்துடன் பூச்சொரிதல் விழா நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பிடித்தமானரோஜா மல்லிகை உள்ளிட்ட வண்ண வண்ண பூக்களை குவித்து வைத்த தட்டுகளுடன் வருகை தந்தனர். காலை 6.30 மணி அளவில் கோவில் நிர்வாகம் சார்பில் உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து அம்மனுக்கு பூத்தட்டுகளை வைத்து சிறப்பு தீபாராதனை செய்தனர். சக்திகோஷம் விண்ணதிர பூத்தட்டுக்களுடன் பெண்கள் வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
