Rock Fort Times
Online News

திருச்சியில் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் முப்படை ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாமில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு…!

திருச்சியில் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் முப்படை( ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரர் குறைதீர்ப்பு முகாமில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன்
திருச்சியில் இன்று( ஜூன் 28) நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

ராணுவம், கடற்படை, விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் நலன்கருதி திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ பரேடு கிரவுண்டில் ஜூன் 30-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மாபெரும் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அலகாபாத் முதன்மை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், பல்வேறு முப்படை ஆவண அலுவலகங்கள், அனைத்து வங்கிகளின் அலுவலர்கள் பங்கு பெறவிருக்கின்றனர். இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய அரசின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் செய்தி, ஒளிபரப்பு துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொள்கின்றனர். எனவே தமிழகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் 30-ந்தேதி திருச்சியில் நடைபெற உள்ள இம்முகாமில் கலந்து கொண்டு தங்கள் ஓய்வூதிய குறைகளுக்கு தீர்வு காண அறிவுறுத்தப்படுகின்றனர். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் படைவீரர் மற்றும் அவர் சார்ந்தோர் தங்கள் படைபணிச் சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களின் அசலுடன் நேரில் வந்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு செய்து கொள்ள விரும்பும் ஓய்வூதியதாரர்கள் தங்களது பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகிய தகவல்களை 88073 80165 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் ஓய்வூதியதாரர்களுக்கு முகாமில் முன்னுரிமை வழங்கப்படும். முகாமுக்கு வர முடியாதவர்களுக்கு அந்தந்த மாவட்டத்திற்கு குறைதீர்க்கும் வகையில் 5 நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நேரடியாக அந்தந்த மாவட்டங்களுக்கு வந்து குறைகளை தீர்த்து வைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்த முகாமில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை உறுதி செய்யப்படவில்லை.ஆனால், மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்