அதிமுக-பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி வீட்டில் தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அதிமுக விரைவுப்படுத்தியுள்ளது. அந்தவகையில் முதல் ஆளாக தேர்தல் கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. நேற்றைய தினம் அதிமுக-பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் இணைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அதிமுக கூட்டணியில் பாஜக, அ.ம.மு.க., பாமக (அன்புமணி), த மா.கா.உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனையடுத்து இன்று(22-01-2026) தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்காக ஏற்கனவே தமிழகம் வந்துள்ள பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் இன்று எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்றார். அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அனைவருக்கும் காலை விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்து நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விருந்திற்கு பிறகு அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. விஜய்யின் தவெக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை இணப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.