“ஊர் என்பது” உறையூரே என்று இலக்கியத்திலும், வரலாற்றிலும் போற்றப்படும் உறையூரில் கோயில் கொண்டு பக்தப் பெருமக்களை காத்துவரும் தமிழகத்தின் சிறந்த சக்தி தலமாக அருள்மிகு வெக்காளியம்மன் திருத்தலம் விளங்குகிறது. மண்மாரியில் இருந்து உறையூரையும் மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளி அம்மன் இன்றும் தனக்கு கூரையின்றி மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வெட்ட வெளியில் வீற்றிருந்து உலக மக்கள் அனைவரையும் காத்து வருகின்றாள். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டும் வரமருளும் அன்னை வெக்காளி அம்மனுக்கு சித்திரைப் பெருவிழா கடந்த ஐந்தாம் தேதி மாலை விநாயகர் வழிபாடுடன் தொடங்கியது .6ம் தேதி காலை காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினமும் காமதேனு வாகனம் பூப்பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது . ஒன்பதாம் நாள் திருவிழாவான இன்று காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். காலை 10 மணிக்கு பக்தர்கள் சக்தி கோஷம் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் நிலையை அடைந்தது .விழாவின் பதினோராம் நாளான 16ஆம் தேதி காப்பு கலைதல் இரவு 8 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சு. ஞானசேகரன் லட்சுமணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

