Rock Fort Times
Online News

திருச்சி, சூப்பர்பஜார் குப்பைத்தொட்டி முன்பு மூதாட்டியின் சடலம் கிடந்ததால் பெரும் பரபரப்பு-கொலை செய்யப்பட்டாரா?- போலீசார் விசாரணை (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை  அடுத்துள்ள திருவாசியை சேர்ந்தவர் கல்யாணி. இவரது கணவர் ரயில்வே துறையில் பணிபுரிந்து இறந்து விட்டார். கல்யாணி தனக்கு வரும் பென்ஷன் பணத்தை வைத்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று பென்ஷன் பணத்தை எடுப்பதற்காக மண்ணச்சநல்லூர் சென்றவர் அங்கிருந்து மலைக்கோட்டை பகுதிக்கு வந்தார். அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக இருக்கும் அவரது மகன் வனத்தான் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இந்தநிலையில் இன்று(09-12-2024) மலைக்கோட்டை சூப்பர் பஜார் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் குப்பைகள் கிடக்கும் பகுதியில் சாக்கில் சுற்றிய நிலையில் மூதாட்டி ஒருவர் சடலமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டியின் உடலை பார்வையிட்டனர். அப்போது அந்த மூதாட்டி அணிந்திருந்த மூக்குத்தி, தோடு ஆகியவை திருடப்பட்டு உடலில் காயங்களும் இருந்தன. நாய்கள் மூதாட்டியின் கைகளை கடித்து குதறி இருந்தன. இதுதொடர்பாக மூதாட்டியை தேடி வரும் உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தது கல்யாணி தான் என்பதை உறுதி செய்ததோடு அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். நகைக்காகவும், பணத்திற்காகவும் மூதாட்டியை யாரோ கொலை செய்து குப்பைத் தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று இரவு நான்கு இளைஞர்கள் அந்தப் பகுதியில் சண்டை போட்டுக் கொண்டு சுற்றித் திரிந்தது தெரியவந்தது. அவர்கள் மூதாட்டியை கொலை செய்தார்களா என்று அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சூப்பர் பஜார் பகுதியில் மூதாட்டி சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்