Rock Fort Times
Online News

திருச்சி,ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழா ! முகூர்த்தக்கால் நடப்பட்டு கோலாகல துவக்கம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது திருச்சி,ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்ட விழாவை முன்னிட்டு தெற்கு உத்திர வீதியில் உள்ள தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா இன்று ( ஜன.31) நடைபெற்றது.  முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதப்பட்டு புனிதநீர் தெளிக்கப்பட்டது.  அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேரில் நட்டனர். இந்நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். தைத்தேரோட்ட திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். தைத்தேர் திருவிழாவின் முதல் நாளான நாளை மறுநாள்(2-ந்தேதி) காலை 5.30மணி முதல் காலை 6.30 மணிக்குள் மகர லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து தைத்தேர் திருவிழா 2-ந்தேதி துவங்கி வரும் 12-ந்தேதி வரை 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். .  விழாவின் இரண்டாம் நாளான 3-ந்தேதி காலை நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும் வீதியுலா வருகிறார். 4-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 5-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும் மாலை கருட வாகனத்திலும், 6-ந்தேதி காலை சேவ வாகனத்திலும் மாலை ஹனுமந்த வாகனத்திலும், 7-ந்தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார். 8-ந்தேதி நெல் அளவை கண்டருளிகிறார். 9-ந்தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ந்தேதி காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு காலை 5 மணிக்கு வருகிறார். காலை 5மணிமுதல் காலை 5.45 மணிவரை ரதரோஹணம்(மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.15 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 11-ந்தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 12-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்