Rock Fort Times
Online News

திருச்சி, எடமலைப்பட்டி புதூரில் சபல போலீஸ் சஸ்பெண்ட்..!

சமூகத்தில் நடக்கும் குற்ற செயல்களை தடுத்து, பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு அரணாக திகழ வேண்டியது காவல்துறையின் தலையாய கடமை. மிகவும் பொறுப்பு மிக்க இப்பணியில் சில சபலபுத்தி கொண்டவர்கள் வேலை பார்க்கிறார்கள். இது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கருப்பு புள்ளியாக அமைந்து விடுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம், திருச்சியில் அரங்கேறியுள்ளது. திருச்சி, எடமலைப்பட்டி புதூரில் வசிக்கும் பெண் ஒருவரது வீட்டிற்குள் இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்துள்ளார். இதனால் அச்சமடைந்த அப்பெண் இது குறித்து காவல் அவசர உதவி எண்ணான 100க்கு தகவல் தெரிவித்துள்ளார். இத்தகவல் சம்பவம் குறித்த தகவல் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்திற்கு பகிரப்பட்டுள்ளது. அப்போது பணியில் இருந்த காவலர் சுல்தான் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடைபெற்ற பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டை சுற்றி இருட்டாக இருந்ததால் சுவரேறி குதித்த மர்ம நபரை தேடுவதற்கு வசதியாக டார்ச் லைட்டை போலீசுக்கு தகவலளித்த பெண் போலீஸ் சுல்தானிடம் கொடுத்துள்ளார். ஆனால் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட போலீஸ் சுல்தான், டார்ச் லைட்டை கையிலிருந்து வாங்குகிற சாக்கில் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் பதறிப்போன அப்பெண், இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரித்த சிட்டி போலீஸ் கமிஷனர் காமினி ஐபிஎஸ் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட காவலர் சுல்தானை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்